search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்தூர்பேட்டை பஸ் கண்ணாடி"

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இருந்து சேலத்துக்கு பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது.

    இந்த பஸ்சில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 18), அப்துல்லா (19) ஆகிய 2 பேரும் பயணம் செய்தனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே சின்னக்குப்பத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்த பஸ் சின்னக்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரும் நாங்கள் சின்னக்குப்பத்தில் இறங்க வேண்டும் பஸ்சை நிறுத்துங்கள் என்று கூறினர்.

    ஆனால் டிரைவர் சின்னகுப்பத்தில் பஸ் நிற்காது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அடுத்த நிறுத்தமான பெரியகுப்பத்தில் பஸ் டிரைவர் இறக்கி விட்டார்.

    சின்னக்குப்பத்தில் பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.

    இது குறித்து திருநாவலூர் போலீசில் பஸ் டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ் மீது கல்வீசிய ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    ×